Advertisements

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரச்சாரம் என்றால் அரசியல் கட்சி தலைவர்கள் மாறி மாறி புகார் கூறுவது இயல்பு. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி விமர்சனங்களுக்கு பிரேமலதா பதிலடி கொடுத்துள்ளார்.
அன்புமணிக்கு ஒரு படி மேலே சென்று ஒருமையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை சேத்துப்பட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், நான்கு நாட்களுக்கு முன்பு இங்கு எதிர்க்கட்சி தலைவர் வந்திருக்கிறார். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். நாம் எவ்வளவு கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம்.
அவர்கள் கொஞ்சம் கூட கண்ணியமே இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீயும், உன் வேட்பாளரும் வென்றால் என்ன செய்வாய் என்பதை சொல்லு. அதை விடுத்து குடும்பத்தை இழுப்பதெல்லாம் ஆகாது. நீ கண்ணிய குறைவாக பேசினால், மக்களே உன்னை அடிச்சு விரட்டுவார்கள். அதில் மாற்று கருத்தே இல்லை. உங்களை பற்றி எல்லாம் நான் பேசுவதே கிடையாது.
எதற்கு எங்களை பற்றி பேசுகிறீர்கள். உன்னால் முடிந்தால் உன் வேட்பாளர் என்ன செய்வார் மக்களுக்கு என்ன செய்வோம் என்பதை சொல்லு. அதைவிடுத்து தேமுதிகவை பற்றியும், எங்கள் கூட்டணியில் உள்ள திமுகவை பற்றியும், கலைஞர் ஐயா குடும்பத்தையும், வேட்பாளரையும் அவதூறாக பேசினால் மக்களே தமிழ்நாடு முழுவதும் உன்னை அடிச்சு விரட்டுவார்கள். நாங்கள் மிகவும் கண்ணியமான கட்சி.
அண்ணா சொன்னதை போல கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். கண்ணியமாக தான் பேசுவோம். புரிஞ்சுக்கோங்க. கேப்டன் ராணுவ கட்டுப்பாட்டுடன் வழிகாட்டியுள்ளார். தேவையில்லாமல் பேசும் வேலை வேண்டாம். குடும்பத்தை பற்றி திட்டுவதற்காக தேர்தல் நடக்கிறது. உன்னால் முடிந்தால் மக்களுக்கு வந்து நல்லது பண்ணு. எடப்பாடி பழனிசாமியும், அன்புமணியும் தரம்தாழ்ந்து விமர்சிக்கிறார்கள்.
தேமுதிக ஐசியூவில் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தேவையில்லாத வார்த்தைகள் பேசக்கூடாது. டெல்லியில் திரும்பி கூட பார்க்க முடியாதளவுக்கு லஞ்சம், ஊழல் வழக்கு உள்ளது. நீ அடுத்த கட்சியை பேசலாமா. எங்களை விமர்சிக்க உனக்கு தார்மீக உரிமையே இல்லை என அன்புமணிக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 5 சீட்கள், ஒரு மாநிலங்களகை சீட் தருவதாக எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தமே போட்டார். மாநிலங்களவை எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி” என்றார்.
Advertisements


