
சென்னை: அ.தி.மு.க., தே.மு.தி.க., இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய சென்னை, திருவள்ளூர் (தனி), விருதுநகர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் தே.மு.தி.க., வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலைப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டு இருந்தார். மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்குத் தென்காசி (தனி) தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்குத் திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
மேலும் குறித்த அ.தி.மு.க., – தே.மு.தி.க., இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்தது நிலையில் தே.மு.தி.க., வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக இன்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்தார். அவரை, தே.மு.தி.க., வின் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் இன்று(மார்ச் 20) மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., வின் தலைமை அலுவலகத்தில் இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இபிஎஸ்., -ம், பிரேமலதாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். தே.மு.தி.க., வுக்கு திருவள்ளூர்(தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.



