
ஆம் ஆத்மி கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ராகவ் சத்தா, பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) இணைவதாக தெரிவித்து, கட்சியிலிருந்து விலகியுள்ளார்.செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா, “என் ரத்தமும் வியர்வையும் சிந்தி, என் இளமைக்காலத்தின் 15 ஆண்டுகளை அர்ப்பணித்த ஆம் ஆத்மி கட்சி, அதன் கொள்கைகள், விழுமியங்கள் மற்றும் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிவிட்டது.
இப்போது இந்தக் கட்சி தேச நலனுக்காகச் செயல்படாமல், அதன் தனிப்பட்ட நலன்களுக்காகச் செயல்படுகிறது.கடந்த சில ஆண்டுகளாக, நான் தவறான கட்சியில் சரியான நபராக இருக்கிறேன் என்பதை என்னால் உணர முடிந்தது. எனவே, இன்று நான் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிக்கிறேன். மூன்றில் இரண்டு பங்கு விலகுவதால் கட்சித் தாவல் தடைச்சட்டம் பாயாது” என்று கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், ராஜ்ய சபாவில் அக்கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்துவந்தவர் ராகவ் சதா. சமீபத்தில் ராகவ் சதா ஆம் ஆத்மி மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து அக்கட்சி நீக்கியது. இதனைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்திருப்பது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்நிலையில் ராகவ் சத்தா, அசோக் மிட்டல் மற்றும் சந்தீப் பதக் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர். மீதமுள்ள ஸ்வாதி மாலிவால், ஹர்பஜன் சிங், விக்ரம் சாஹ்னி ஆகியோரும் பாஜகவில் இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது..



