
3 மத்தியக் குழுக்கள் தமிழ்நாட்டில் ஆய்வு செய்துள்ளன. அந்தக் குழுக்கள் 21ஆம் தேதி அளவில் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றும் 27ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதி விடுவிக்கப்படும் என்றும் அமைச்சர் அமித் ஷா தெரிவித்ததாக டி.ஆர். பாலு கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்குத் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்கக் கோரி, தமிழகத்திலிருந்து அனைத்து அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் மிக்ஜம் புயல் வெள்ள பாதிப்பு மற்றும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கும் மத்திய அரசு நிவாரண நிதியை வழங்கக் கோரிக்கை விடுத்தனர். தமிழ்நாடு அரசு கோரிய ரூ.37,907 கோடி நிவாரண நிதியை உடனே விடுவிக்க வலியுறுத்தியுள்ளனர்.
அமைச்சரைச் சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி. ஆர். பாலு, “மத்திய அமைச்சரைச் சந்திதபோது அவரிடம் தமிழ்நாடு வெள்ள பாதிப்பு தொடர்பாக விரிவான அறிக்கை வழங்கப்பட்டது. உடனடியாக நிதியை அளிக்க வேண்டும் என்ற முதல்வரின் கடிதத்தையும் உள்துறை அமைச்சரிடம் அளித்தோம்” எனக் கூறினார்.
3 மத்தியக் குழுக்கள் தமிழ்நாட்டில் ஆய்வு செய்துள்ளன. அந்தக் குழுக்கள் 21ஆம் தேதி அளவில் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றும் 27ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதி விடுவிக்கப்படும் என்றும் அமைச்சர் அமித் ஷா தெரிவித்ததாக டி.ஆர். பாலு கூறியுள்ளார்.மத்திய அரசின் நிபுணர் குழு அறிக்கை வழங்கியபின்னர் உள்துறை, வேளாண் துறை, நிதித்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் அதிகாரிகள் அறிக்கையை ஆய்வு செய்து எவ்வளவு நிதி வழங்க வேண்டும் எனப் பரிந்துரை செய்வார்கள் எனவும் பிறகு நிதி விடுவிக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார் என்று டி.ஆர்.பாலு தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசு தமிழ்நாட்டை புறக்கணிக்கவில்லை என்றும் தமிழகத்தில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்திருக்கிறோம் என்றும் என அமித் ஷா கூறியதாகப் பாலு தெரிவித்திருக்கிறார்.


