Puducherry: தேர்தலை ரத்துசெய்யக்கோரிஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்!

Advertisements

புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தலை ரத்துசெய்யக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் தேர்தல் பரப்புரையானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ், அதிமுக, மதிமுக, பாஜக உள்ளிட்ட வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அதிமுக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இன்று காலையில் புதுச்சேரி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், புதுச்சேரியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். புதுச்சேரியில் வாக்காளர்களுக்குப் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் பணம் தருகிறார்.

கடந்த 2 நாட்களாக வாக்காளர்களுக்குப் பாஜகவினர் ஓட்டுக்கு ரூ.500, காங்கிரஸ் கட்சியினர் ஓட்டுக்கு ரூ.200 கொடுப்பதாகப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். பணம் கொடுத்துதான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற சூழல் உள்ளது. புதுச்சேரியில் பாஜகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. பாஜகவினர் பணம் கொடுத்த வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளேன் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளை மாவட்ட ஆட்சியர் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து ஆட்சியர் அலுவலக தரையில் அமர்ந்து அதிமுக புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது தேர்தல் துறை பணப்பட்டுவாடாவை தடுக்கவில்லை. இந்தத் தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை என்று கோஷம் எழுப்பினார். காங்கிரஸ், பாஜக கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்கிறார்கள் என்று ஏற்கனவே புதுச்சேரி தேர்தல் துறைக்கும், இந்திய தேர்தல் துறைக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆட்சியிடம் மனு அளித்தனர். இதேபோல், புதுவை தேர்தலை ரத்து செய்ய அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனும் வலியுறுத்தியுள்ளார். ஓட்டுக்குப் பணம் தருவதை தடுக்கக்கோரி புதுவை அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். நேர்மையாகத் தேர்தல் நடத்தாவிடில் தேர்தலைப் புறக்கணிப்பேன் எனப் புதுவை அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *