
சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக., வுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுக்குத் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக தரப்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டார்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 20) துவங்குகிறது. இதனால் ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்யத் தீவிரமாகி வருகின்றன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு அனைத்தும் முடிந்து விட்டது; பா.ஜ., கூட்டணியில் இதுவரை 7 கட்சிகள் இணைந்துள்ளன. ஆனால் அதிமுக தரப்பில் கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் கட்சி மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்குத் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அதிமுக தலைமை அலுவலகத்தில் கையெழுத்தாகிறது. புதிய தமிழகம் கட்சிக்குத் தென்காசி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்குத் திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், தேமுதிக., வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், 16 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று வெளியிட்டார்.
வேட்பாளர் பட்டியல்:
சென்னை வடக்கு – ராயபுரம் மனோ
சென்னை தெற்கு – ஜெயவர்தன்
காஞ்சிபுரம் – ராஜசேகர்
அரக்கோணம் – ஏ.எஸ்.விஜயன்
கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ்
விழுப்புரம் – பாக்யராஜ்
சேலம் – விக்னேஷ்
நாமக்கல் – தமிழ்மணி
ஈரோடு – அசோக்குமார்
சிதம்பரம் – சந்திரஹாசன்
நாகப்பட்டினம் – சுர்ஜித் சங்கர்
கரூர் – தங்கவேல்
மதுரை – டாக்டர் சரவணன்
தேனி – நாராயணசாமி
ராமநாதபுரம் – ஜெயபெருமாள்
ஆரணி – கஜேந்திரன்


