
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிக்குள் கடும் உள்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையில் மற்றொரு அணியும் என கட்சி இரண்டு பிரிவுகளாக உடைந்து செயல்பட்டு வருகின்றன.
இதில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பினர் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ள சூழலில், இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார்.
இப்படிப்பட்ட பெரும் குழப்பங்களுக்கு மத்தியில், முதலில் பசுமை வழிச்சாலை இல்லத்தில் நடைபெறவிருந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திடீரென ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.
அங்கு வந்த எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்திய பின், தவெக அரசுக்கு சி.வி.சண்முகம் – வேலுமணி தரப்பு ஆதரவளிக்கும் இந்த இக்கட்டான சூழலில் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன என்பது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் தீவிர அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.


