
புதுடெல்லி:”அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்காகக் கைக்குட்டை போட்டு இடம் பிடிக்க யாரும் இல்லை” என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கிண்டலாகக் கூறினார்.
கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேசம் அமேதி தொகுதியிலும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். வயநாட்டில் வென்ற அவர் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.
இந்த முறையும் இந்த இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி போட்டியிடலாமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தத் தொகுதிக்கு இதுவரை காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் ராகுலின் தங்கை பிரியங்காவின் கணவரான ராபர்ட் வதோராவுக்கும் இந்தத் தொகுதியின் மீது ஒரு கண் உள்ளது.
இந்த நிலையில், அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிடுவது குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கிண்டல் செய்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, “ஒரு காலத்தில் பஸ்ஸில் இடம் பிடிப்பதற்காகப் பஸ் வந்து நின்றதும் ஜன்னல் வழியாகக் கைக்குட்டையை உள்ள உள்ளே போட்டு இடம் பிடிப்பது வழக்கம்.
ஆனால் இந்த முறை ராகுலின் மைத்துனர் இந்தத் தொகுதியின் மீது கண் வைத்திருப்பதால் ராகுலுக்காகக் கைக்குட்டை போட்டு இடம்பிடிப்பதற்கு யாரும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.
அவர் மேலும் கூறும்போது, “தேர்தலுக்கு இன்னும் 27 நாட்களே உள்ளன. ஆனால் இன்னும் காங்கிரஸ் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்தத் தொகுதியில் நான் ஐந்து ஆண்டு காலத்தில் செய்ததை ராகுல் காந்தியால் 15 ஆண்டுக் காலம் பதவியில் இருந்தபோது செய்ய முடியவில்லை” என்றார்.
இதற்கிடையில் வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தியிடம், “அமேதி தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளராகக் களம் இறங்குவீர்களா?” எனக் கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த ராகுல், கட்சி என்ன கட்டளை இடுகிறதோ அதைச் செய்வேன்” என்று கூறி இருந்தார்.
வயநாட்டில் வருகிற 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன் பிறகு அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்வாரா? என்று தெரியவில்லை. அங்கு வேட்பு மனு தாக்கல் செய்ய மே மூன்றாம் தேதி கடைசி நாள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


