
அ.தி.மு.க.விலிருந்து இதுவரை 5 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அ.தி.மு.க. கரூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். தனது பதவியை ராஜினாமா செய்தார். தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய 6 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள 6 தொகுதிகளில் திருச்சி கிழக்கு தொகுதியை தவிர்த்து, ஏனைய 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால் காலியானது. இந்நிலையில் கரூர் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து தனது சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்தார். இவரும் த.வெ.க.வில் இணைய இருப்பதாக தெரியவருகிறது.
அ.தி.மு.க.விலிருந்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியேறியதின் மூலம், சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் 41-ஆக குறைந்துள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் காலியான தொகுதிகளின் எண்ணிக்கையும் 7 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், கரூர் தொகுதியும் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



