ADMK meeting:2026-ல் நாம் தமிழருடன் கூட்டணி? – அ.தி.மு.க. நிர்வாகிகள் கோரிக்கை!

Advertisements

சென்னை:பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது ஏன் என்பது பற்றி அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 10-ம் தேதி அன்று தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று 3-வது நாளாக நடைபெற்றது.

காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல் நாள் அன்று ஆலோசனை நடத்தப்பட்டது. 2-வது நாளான நேற்று சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று காலையில் முதலில் அரக்கோணம் தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், பின் தஞ்சை தொகுதி நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அரக்கோணம் தொகுதி நிர்வாகிகளின் கூட்டம் காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டம் 11.45 மணியளவில் முடிவடைந்தது. இந்தக் கூட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கட்சியின் வளர்ச்சி பணிகள் பற்றியும், பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்தும் எடப்பாடி பழனிசாமி முன்னணியில் காரசாரமான கருத்துக்களை தெரிவித்தனர்.

அப்போது கட்சித் தலைமை, யாருடன் கூட்டணி வைக்கலாமெனக் கேட்டதற்கு, நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என்றனர்.

அதேபோல், பா.ம.க. உடன் கூட்டணி வைத்திருந்தாலும் அரக்கோணம் போன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் எனவும் நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாகச் சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்ததும், சாட்டை துரைமுருகன் கைதிற்கு எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *