
அ.தி.மு.க. என்பது தனிக்கட்சி கிடையாது என்றும் பா.ஜ.க.வின் கிளை அமைப்பு என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்திய நாட்டையும் – தன்மானமிக்க தமிழ்நாட்டையும் காக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை, லட்சியமாகக் கொண்டு அமைந்திருக்கும் நம் கூட்டணி என்று கூறினார்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அழித்து, ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக மாற்ற மத்திய பா.ஜ.க. அரசு நினைப்பதாகவும் அவர்களைப் பொறுத்தவரை ஒரு மதம், ஒரு மொழி,ஒரு பண்பாடு – ஒரே ஒரு தலைமைதான் இருக்க வேண்டும் என்ற பன்முகத்தன்மைக்கு எதிராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
அ.தி.மு.க. என்பது தனிக்கட்சி கிடையாது என்றும் பா.ஜ.க.வின் கிளை அமைப்பு என்றும் கூறினார். அந்தக் கிளை அமைப்பைச் சேர்ந்த பழனிசாமி, பிரதமர் மோடி கொடுக்காத வாக்குறுதிகள் அனைத்தையும் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தார்.



