
கூகுளும் அதானியும் இணைந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய தரவு மைய வளாகத்தைக் கட்டமைக்க உள்ளனர். இதற்காக 1500 கோடி டாலரை முதலீடு செய்ய உள்ளதாகக் கூகுள் அறிவித்துள்ளது.
பாரத் ஏஐ சக்தி என்னும் பெயரில் தில்லியில் கூகுள் நடத்திய மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், நிர்மலா சீதாராமன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரத் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் நர லோகேஷ், கூகுள் கிளவுட் தலைமைச் செயல் அலுவலர் தாமஸ் குரியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய கூகுள் கிளவுட் தலைமைச் செயல் அலுவலர் தாமஸ் குரியன், செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்கத்துக்கான உலகளாவிய மையமாக விசாகப்பட்டினம் உருவெடுக்கும் என்று தெரிவித்தார்.
கூகுள் நிறுவனம் அதானி குழுமத்துடன் இணைந்து விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தரவு மையத்தைக் கட்டமைக்க உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தில் 1500 கோடி டாலரைக் கூகுள் முதலீடு செய்ய உள்ளதாகவும் தாமஸ் குரியன் தெரிவித்தார்.



