
நடிகையைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மலையாள நடிகர் திலீப்பையும், அவர் நண்பர் சரத்தையும் எர்ணாக்குளம் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
அவர்களைத் தவிர மற்ற ஆறு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது.
2017ஆம் ஆண்டு நடிகையைத் திருச்சூரில் இருந்து எர்ணாக்குளத்துக்குக் கடத்தி ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்து படம்பிடித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் உள்ளிட்ட எட்டுப் பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்றது.
எர்ணாக்குளம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹனி வர்க்கீஸ் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தார். அதில் எட்டாவதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்படவில்லை என்று கூறி அவரை விடுவித்தார். ஏழாவதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட திலீப்பின் நண்பர் சரத்தையும் விடுவித்தார். பல்சர் சுனில் உட்படக் குற்றஞ்சாட்டப்பட்ட முதல் ஆறு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.
குற்றவாளிகளுக்கான தண்டனை வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட திலீப், தனது திரையுலக வாழ்க்கையைக் கெடுக்க நடைபெற்ற சதி இது என்றும், அதில் ஊடகங்களும் சேர்ந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.



