
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் காற்றுடன் கூடிய கனமழை இடைவிடாது பெய்தது. இதனால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்தது. மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மரங்கள் ஆங்காங்கே சாய்ந்துள்ளதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பால் விநியோகம் தடைபட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கன மழையால் சென்னையில் ஆவின் மற்றும் தனியார் பால் விநியோகம் முடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தொலைபேசி மூலம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பால் விநியோகம் தடைபெற்றுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் நிலைமை சீரடைந்ததும் பால் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் பால் விநியோகம் முடங்கியது. காலை 5 மணி முதலே பால் விநியோகம் வந்து சேரவில்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி விளக்கம் அளித்துள்ளார். போக்குவரத்து சரியானதும் பால் விநியோகம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

