
தாலி கட்டும் நேரத்தில் தாலியை தட்டி விட்ட மணப்பெண் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால் மணமகன் தாலியுடன் நின்று கொண்டிருந்தது பார்ப்போரை சங்கடத்தில் ஆழ்த்தியது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள சிக்கப்யாலகெரே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவருக்கும் சல்லகெரே தாலுக்கா திப்பரட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து, இருவருக்கும் டிசம்பர் 7ஆம் தேதி (நேற்று) திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு, சிக்கப்யாலகெரேவில், உள்ள பைரவேஷ்வர் திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முன்னதாக, நேற்று முன் தினம் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளும் நடந்து முடிந்தன.
இந்த நிலையில், திருமண தினத்தன்று தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் ஐஸ்வர்யா திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து விட்டார். மணமகன் மஞ்சுநாத் தாலி கட்டும் நேரத்தில் தாலியை தட்டி விட்ட மணப்பெண் ஐஸ்வர்யா, திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மணப்பெண்ணை சமாதானம் செய்ய முயற்சித்தும் எந்த பலனும் இல்லை. அந்த சமயத்தில் கையில் தாலியுடன் மணமகன் நின்று கொண்டிருந்தது பார்ப்போரை சங்கடத்தில் ஆழ்த்தியது.
மேல்படிப்பு படிக்க வேண்டும் என்பதால் திருமணம் செய்து கொள்ள முடியாது என மணப்பெண் ஐஸ்வர்யா திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தனது படிப்பைத் தொடர விரும்புவதாகவும், ஆனால் மணமகன் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும், அதனால் திருமணத்தை நிறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

