
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோப்பைடன், டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவின் முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சி உள்ளன. அந்நாட்டு அதிபராக ஜோப்பைடன் செயல்பட்டு வருகிறார். அவர் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஈடுபட்டு வருகின்றன.
அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கவும் அந்நாட்டில் தேர்தல் முறை பின்பற்றப்படுகிறது. அதன்படி, அந்நாட்டில் உள்ள மாகாணங்களில் தங்கள் கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க தனித்தனியே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோப்பைடனையும், குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்பையும் களமிறக்க அந்தந்த கட்சியினர் இடையே ஆதரவு அதிகரித்துள்ளது.
ஜார்ஜியா, மிசிசிபி, வாஷிங்டன் போன்ற மாகாணங்களில் நடந்த தேர்தலில் ஜோப்பைடன், டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலில் களமிறங்கவேண்டுமென்ற ஆதரவு அதிகரித்தது.
இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராகத் தற்போதைய அதிபர் ஜோப்பைடன் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. ஜோப்பைடனை எதிர்த்துக் குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறக்கப்படுவதும் உறுதியாகியுள்ளது.
ஜோப்பைடன், டொனால்டு டிரம்ப் அதிபர் வேட்பாளராகக் களமிறங்க அந்தந்த கட்சிகளுக்குள் பெரும் எதிர்ப்பு இல்லாததால் இருவரும் அதிபர் தேர்தலில் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.



