
சென்னை: காற்றாலை சீசன் அடுத்த மாதம் துவங்குகிறது. அதற்கு முன்னோட்டமாக, தற்போது தினமும் காற்றாலைகளிலிருந்து, ஒரு கோடி யூனிட்டிற்கு மேல் மின்சாரம் கிடைக்கிறது.
தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், 10,603 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைத்துள்ளன. மே முதல் செப்., வரை காற்றாலை சீசன். மொத்த காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தில், 60 சதவீதத்திற்கு மேலானவற்றை, தனியார் நிறுவனங்கள் சொந்த தேவைக்குப் பயன்படுத்துகின்றன. மீதி மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது.
சீசன் காலத்தில் காற்றாலைகளிலிருந்து தினமும் சராசரியாக, 10 கோடி யூனிட்களுக்கு மேல் மின்சாரம் கிடைக்கிறது. அடுத்த மாதம் காற்றாலை சீசன் துவங்குகிறது. அதற்கு முன்னோட்டமாக, சில தினங்களாகக் காற்றாலைகளிலிருந்து தினமும், ஒரு கோடி யூனிட்களுக்கு மேல் மின்சாரம் கிடைக்கிறது.
மார்ச் முதல் கோடை வெயிலால், மின் தேவை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், காற்றாலைகளில் அதிக மின்சாரம் கிடைக்கிறது. எனவே, மின் தேவையைப் பூர்த்தி செய்ய அந்த மின்சாரம் முழுதுமாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு யூனிட் காற்றாலை மின் கொள்முதல் விலை சராசரியாக, 3.10 ரூபாயாக உள்ளது. இந்த மின்சாரம், சுற்றுச்சூழலையும் பாதிப்பதில்லை.



