YS Jagan Mohan Reddy: சந்திரசேகர்ராவுடன் ஆந்திர முதல்வர் திடீர் சந்திப்பு!

Advertisements

தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர்ராவை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் நேற்று நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா மாநில முன்னாள் முதல்வருமான சந்திரசேகரராவ் கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி பண்ணை வீட்டில் வழுக்கி விழுந்ததில் அவர் இடுப்பு எலும்பில் விரிசல் ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

இதனால் டாக்டர்கள் அவரது இடது இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர், டிசம்பர் 15ம் தேதி சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து கேசிஆர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கேசிஆர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது தெலங்கானா முதல்வர் ரேவந்த், தெலங்கானா அமைச்சர்கள், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு மற்றும் தெலுங்கு மாநிலங்களின் முக்கிய தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலர் மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டனர். இந்நிலையில் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள நந்திநகர் இல்லத்தில் கே.சி.ஆரை, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் நேற்று நேரில் சந்தித்து சில மணி நேரம் உடல் நலம் குறித்தும், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் பேசினர்.

முன்னதாக ஐதராபாத் பேகம்பேட் விமான நிலையத்திற்கு வந்த ஜெகன் மோகனை முன்னாள் அமைச்சர் வெமுலா பிரசாந்த் வரவேற்றார். அவருடன் எம்எல்ஏ தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் உடன் இருந்தார். அதனைத் தொடர்ந்து ஜெகன்மோகன் ஐதரபாத்தில் உள்ள அவரது தாயார் விஜயம்மாவை நேரில் சந்தித்து சுமார் அரை மணிநேரம் பேசினார். அவரது தங்கை ஷர்மிளா நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் தனது அம்மாவை நேரில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *