
இத்தாலியில் L’Espresso என்ற வாரப்பத்திரிகை வெளியாகிறது .இந்த பத்திரிகையில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி இடம் பெற்றிருந்த அட்டைப்படம் இஸ்ரேல் நாட்டை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. ‘எல்’அபுசோ’ (துஷ்பிரயோகம்) என்று தலைப்பிடப்பட்ட அந்தப் புகைப்படத்தில், ஆயுதம் ஏந்திய இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர் ஒருவர், சிரித்தபடி பயந்த முகபாவத்துடன் இருக்கும் ஒரு பாலஸ்தீனியப் பெண்ணை செல்போனில் படம் பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது.
இந்த படத்தை பார்த்ததும் இஸ்ரேல் அதிகாரிகள் கடும் கோபமடைந்துள்ளனர். இத்தாலிக்கான இஸ்ரேல் தூதர் ஜோனதன் பெலெட், இந்தப் படம் வெறுப்புணர்வை விதைக்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகள் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டுமென்று கூறினார்.
எனினும், இந்தப் படம் உண்மையானது என்று L’Espresso பத்திரிகை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள மக்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் பணியை மேற்கொண்ட இத்தாலிய புகைப்பட ஜர்னலிஸ்ட் பியட்ரோ மஸ்துர்சோ இந்தப் புகைப்படத்தை எடுத்தார். அட்டைப்படத்தில் உள்ள இந்தப் படம், ஆலிவ் அறுவடையின் முதல் நாளான அக்டோபர் 12 ம் தேதி 2025 தேதி ஹெப்ரோனுக்கு மேற்கேயுள்ள இத்னா என்ற பாலஸ்தீனிய கிராமத்தில் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராகத் தொடரும் இஸ்ரேலின் வன்முறையையும் கண்டிக்கும் வகையில், எல்’எஸ்பிரெஸ்ஸோ இந்த இதழை பாலஸ்தீனிய மக்களுக்கு அர்ப்பணித்துள்ளது. இந்த புகைப்படத்தை வெளியிட்டதற்காக, மன்னிப்புக் கேட்கவோ அல்லது தனது அட்டைப்படத்தைத் திரும்பப் பெறவோ அந்த பத்திரிகை மறுத்துவிட்டது. இதற்கிடையே, அமெரிக்கா – ஈரான் நாட்டு அதிகாரிகள் சமதானப் பேச்சுவார்த்தை நடந்த ஹோட்டலுக்கு பில் செலுத்த முடியாமல் பாகிஸ்தான் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரத்தில் ஏப்ரல் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஈரான் -அமெரிக்க அதிகாரிகளுக்கிடையே பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள செரீனா ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடந்தது. ஈரான் மற்றும் அமெரிக்காவைச்சேர்ந்த 150 அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.இந்த பேச்சுவார்த்தை நடந்த செரீனா ஹோட்டல் இஸ்லாமாபாத்ததில் முக்கிய அரசு அலுவலகங்களுக்கு மத்தியில் கயாபான்-இ-சுஹர்வர்டியில் பகுதியில் அமைந்துள்ளது.
15 ஏக்கர் பரப்பளவில் இந்த ஹோட்டல் உள்ளது. இங்கு, சாதாரண அறைகளுக்காக ஒரு இரவுக்கு 160 அமெரிக்க டாலர்களும் பிரசிடென்ஷியல் சூட்டிற்கான 2,375 அமெரிக்க டாலர்களும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த அமைதியான, ரம்மியமான மற்றும் மிகவும் பாதுகாப்பான ஹோட்டலில்தான் அமெரிக்கா – ஈரான் அதிகாரிகள் 21 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு, முன்னதாக, பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு தங்கியிருந்த அனைத்து விருந்தினர்களையும் ஹோட்டலைக் காலி செய்யுமாறு கேட்டுக் கொண்டது. 400 அறைகள் கொண்டது இந்த ஹோட்டல், இது தவிர கூட்ட அரங்குகள், உணவு அறைகள் என பல இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உள்ளன. அப்படியென்றால், அனைத்து அறைகளுக்குமான வாடகையை பாகிஸ்தான் அரசே செலுத்த வேண்டும்.
எனினும், பண நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அரசு, செரீனா ஹோட்டலுக்கான கட்டணங்களைச் செலுத்தவில்லை என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ஐக்கிய அரபு அமீரகத்திடம் 3 பில்லியன் டாலர் கடன் வாங்கியிருந்தது. இந்த தொகையை செலுத்த ஐக்கிய அரபு அமீரகம் கேட்டுக்கொண்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தும்டி, அமீரகம் கேட்டுக் கொண்டதால், பாகிஸ்தான் எம்.பி ஒருவர், டி.வி நேரலை ஒன்றில், ஐக்கிய அரபு அமீரகத்தை ‘பாவப்பட்டவர்கள்’ மற்றும் ‘முட்டாள்கள்’ என்றும் கடுமையாக விமர்சித்தார்.
இதுவும், சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடன் வாங்கும் போது, சாதுவாக இருப்பது. திருப்பி கேட்டால், தாக்குவதா? என்றும் நெட்டிசன்கள் பாகிஸ்தான் அரசை விமர்சித்துள்ளனர். யார் ஹோட்டல் பில்லை செலுத்துவது? என்றும் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் செரீனா ஹோட்டல் உரிமையாளரான Aga Khan Development Network நிறுவனமே செலவுகளை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
உலக அமைதிக்கு தங்களால் அளிக்கப்பட்ட, சிறு உதவி இதுவென்று அந்த நிறுவனம் தெரிவித்ததாக சொல்கிறார்கள்.
மத்திய கிழக்கில் நடக்கும் போர், ஏற்கனவே நலிவடைந்துள்ள பாகிஸ்தான் பொருளாதாரத்தை மேலும் சிதைத்துள்ளது. ஏனெனில், அந்த நாடு தனது எரிசக்தி தேவைக்கு 90 சதவீதத்தை வளைகுடா நாடுகளைதான் நம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


