
நாடு முழுவதும் உள்ள 551 நகரங்களில் நீட் மறுதேர்வு இன்று நடைபெறுகிறது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 3 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. ஆனால், தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்ததால், தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. இதையடுத்து, நீட் மறுதேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, ‘நீட்’ மறுதேர்வு இன்று நாடு முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 இடங்களிலும் நடைபெறுகிறது. இதற்காக 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணி வரை தேர்வு நடக்கிறது.
இத்தேர்வை நாடு முழுவதும் 22 லட்சத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 31 மாவட்டங்களில் உள்ள 307 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 489 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். மேலும், கடந்த முறை தேர்வு ரத்து செய்யப்பட்டதால் இந்த மறுதேர்வுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.



