
The National Investigation Agency | Coimbatore Car Bomb Blast
கோவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவரை என்ஐஏ போலீசார் கைது செய்துள்ளனர்…
கோயம்புத்தூர் உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்புச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடைய செய்தது. நள்ளிரவு நேரத்தில் குண்டு வெடித்ததால் தடை செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.
இந்தக் கார் குண்டு வெடிப்பு தொடர்பாகத் தமிழக போலீசார் விசாரணை நடத்திய நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரைக் கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை என்ஐஏவுக்கு மாற்றப்பட்டதையடுத்து இந்தக் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த வழக்கில் மேலும் ஒருவரை என்ஐஏ கைது செய்துள்ளது.
The National Investigation Agency | Coimbatore Car Bomb Blast
வெடி குண்டு வெடித்து பலியான ஜமிஷா மூபினின் நெருங்கிய நண்பரான முகமது இத்ரிஸ் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணை வளையத்திலிருந்து வந்தார். இந்தநிலையில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் முகமது இதரீஸை நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
முகமது இத்ரீஸ் செல்போனிலிருந்து கடந்த மூன்றாண்டுகளில் அவர் மேற்கொண்ட தொடர்புகளையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கோவையில் கைது செய்யப்பட்ட முகமது இத்ரீஸை இன்று சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆஜர்படுத்திச் சிறையில் அடைக்கவுள்ளனர். இதனையடுத்து முகமது இத்ரீஸை தனியாக விசாரிக்க என்ஐஏ அனுமதி கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



