
மேற்கு வங்க மாநிலத்தின் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று ஓய்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் முதல் கட்ட சட்ட பேரவை தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்து முடிந்ததையடுத்து, வருகின்ற 29 ஆம் தேதி 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைய நிலையில் தேர்தல் அதிகாரிகள், மூத்த காவல்துறை அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படை கமாண்டர்கள் ஆகியோர் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். இது குறித்து தேர்தல் உயர் அதிகாரிகள் கூறுகையில், வாக்காளர்கள் அச்சமின்றி தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக, தொகுதி வாரியாகப் பாதுகாப்புப் படையினர்கள் நிறுத்தப்படும் என்றும் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்களின் ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, அமைதியான இயல்பான வாக்குபதிவை உறுதி செய்யுமாறு கேட்டு கொண்டார். கள்ள வாக்கு பதிவோ, வாக்கு சாவடிகளை கைப்பற்றுவதோ அனுமதிக்கப்படாது என்றும் அதை செய்ய முயற்சிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.



