
மேற்கு வங்காளத்தில் 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், 29-ஆம் தேதி 2-ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த சூழலில், மேற்கு வங்காளத்தில் 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், தங்கள் சின்னத்திற்கு நேராக டேப் ஒட்டப்பட்டிருந்ததாக பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டியதை தொடர்ந்து மறுவாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இந்த 15 வாக்குச்சாவடிகளும் அமைந்துள்ளன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


