
கேரள மாநிலம் மேற்கு பாலக்காட்டுக் கணவாய் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை, கேரளா ஆகிய பகுதிகளுக்கு தென்மேற்குப் பருவமழை மூன்றாவது சுற்றாகத் தொடங்கியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்த மழை அடுத்த 5 நாட்களுக்குத் தொடரும் என்றும் கோவையைச் சேர்ந்த தனியார் வானிலை ஆய்வாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த அறிக்கையில், மேற்கு பாலக்காட்டுக் கணவாய் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை கேரளா ஆகிய பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை மூன்றாவது சுற்று வெளுத்து வாங்கத் தொடங்கியுள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு இந்த மழை தொடரும்.
குறிப்பாக கிணத்துக்கடவுக்குத் தெற்கே உள்ள பாலக்காட்டுக் கணவாய் பகுதிகளுக்கு மிகக் கனமழை இருக்கும். மலுமிச்சம்பட்டி முதல் கிணத்துக்கடவு வரை உள்ள பாலக்காட்டுக் கணவாய் பகுதிக்கு இன்றும் நாளையும் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் பொள்ளாச்சி மற்றும் பொள்ளாச்சிக்கு மேற்கே உள்ள பகுதிகளுக்கு அடுத்த ஒரு வாரத்திற்குக் கனமழை தொடரும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் பாலக்காட்டுக் கணவாய் பகுதியில் காற்றின் திசை வேகம் மற்றும் ஈரப்பதம் மாறுதலால் மழையின் அளவு தாறுமாறாக மாறுபடும். குறிப்பாகச் சொல்லப்போனால் கொங்கு மண்டலத்தின் அனைத்துப் பகுதிகளுமே பாலக்காட்டுக் கணவாய்க் காற்றுத் தாக்கம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை பாதிப்பு காரணமாக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் மழையின் வேறுபாடு அதிகமாக இருக்கும் என்று கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


