
தூத்துக்குடி:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவம்போல் இனி ஒரு சம்பவம் நடக்க கூடாது என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு எனவும், இதற்குக் காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்துள்ளது, இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் தான் நாம் நிற்க வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன் இதனைத் தெரிவித்தார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை வழிபட்டுச் செல்வது வழக்கம்.
இதில் முக்கிய அரசியல் பிரபலங்களும், மற்றும் திரையுலக பிரபலங்களும் வருகை தந்து முருகனை வழிபட்டுச் செல்வர். இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பிரபல திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் இன்று சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

பேட்டரி காரில் வருகை தந்த நடிகர் சிவகார்த்திகேயனை கண்டு, வரிசையில் தரிசனத்திற்காக நின்று கொண்டிருந்த ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் “ஹே… சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன்…” என்று கத்தி கூச்சலிட்டனர்.
அப்போது பேட்டரி காரிலிருந்து முருகன் கோயில் முன்பு சிவகார்த்திகேயன் அங்குள்ள பக்தர்களையும் தனது ரசிகர்களையும் கண்டு மகிழ்ச்சியுடன் கை அசைத்த படி கோவிலுக்குள் சென்றார்.
தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மூலவரான முருகனை வழிப்பட்ட பின்னர் கோவில் உட் பிராகாரதில்லுள்ள சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி, தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை வணங்கினார்.
தொடர்ந்து, தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த சிவகார்த்திகேயனுடன் குழந்தைகள் முதல் பெரியோர்கள்வரை ஏராளமான ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது கோவில் வாசல் முன்பு நின்று கொண்டிருந்த குழந்தைகளிடமும் உற்சாகத்துடன் கைக்குலுக்கி மகிழ்ந்தார்.
தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பலரும் திடீரென்று கோவிலுக்குத் தரிசனம் செய்வதற்காக வருகை தந்த சிவகார்த்திகேயனைக் கண்டு மனம் மகிழ்ந்து மீண்டும் பக்தர்கள் அதே வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில்,” நீண்ட நாட்களாக முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டுருந்தேன்.
கடந்த மாதம் வர நினைத்தேன். ஆனால் மழை வெள்ளத்தால் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று திருச்செந்தூர் வருகை தந்து முருகனை தரிசனம் செய்துள்ளேன். அமரன் படத்தை வெற்றி அடைய செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவம்குறித்து கேட்டபோது, அதைப் பற்றி இங்குப் பேச வேண்டாமென முதலில் கூறிய நடிகர் சிவகார்த்திகேயன் அதன்பின் பேசுகையில், இதுபோல் சம்பவம் நடக்க கூடாது என்பது தான் அனைவரின் நினைப்பும். இதற்குக் காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் தான் நாம் நிற்க வேண்டும் என நினைக்கிறேன். அதற்குப் பெண்களுக்குத் தைரியம் வர வேண்டும். இதுபோல் இனி நடக்காது என வேண்டுவோம். அதைத் தான் நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.” என்றார்.



