
இரண்டு ஊழல் வழக்குகளில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு வரும் 24ம் தேதிவரை ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்(73) மீது அல் அஜிசியா மில் ஊழல், அவென்பீல்டு ஊழல், தோஷகானா ஊழல் உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டது.
சொத்து மதிப்பை மறைத்ததற்காகக் கடந்த 2016ல் பிரதமர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். ஊழல் வழக்கில் கோட் லக்பத் சிறையில் 7 ஆண்டுத் தண்டனை அனுபவித்து வந்த அவர், மருத்துவ சிகிச்சைக்காக 2019 ம் ஆண்டு லண்டனுக்கு சென்றார்.
பின்னர் லண்டனில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார். நவாஸ் 21ம் தேதி பாகிஸ்தான் திரும்புவாரென அவரது தம்பியும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார். இந்நிலையில், நவாசுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இரண்டு ஊழல் வழக்குகளில் வரும் 24ம் தேதிவரை ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தோஷகானா வாகனங்கள் வழக்கில் அவருக்கு எதிரான கைது வாரண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.


