
வயநாடு: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டின் சூரமலை மற்றும் முண்டக்கை பகுதிகளைப் பார்வையிட வருபவர்களை, போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். வயநாட்டிற்கு யாரும் வர வேண்டாமென மாநில அரசும், போலீசாரும் அறிவுறுத்தி உள்ளனர். மீட்புப் பணி இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட, பலர் வயநாட்டிற்கு வரத் துவங்கி உள்ளனர். இது மீட்பு பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் என்பதால், அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர்.
மீட்புப் படையினர், பத்திரிகையாளர்கள், தன்னார்வலர்களை மட்டுமே வயநாடு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மீட்புப்படையினர் தவிர்த்து மற்றவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. சோதனைச்சாவடிகளில், இந்த அட்டையை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மற்றவர்களைத் திரும்பிச் செல்ல அறிவுறுத்துகின்றனர்.



