
நிலச்சரிவால் உறவுகள், உடைமைகளை இழந்து தவிக்கும் வயநாடு மக்களின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகக் கேரளா அரசு அறிவித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 29ம் தேதி பெய்த தொடர் கனமழையின் எதிரொலியாகக் காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஐக் கடந்துள்ள நிலையில், தற்போது வரை மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வயநாடு மாவட்டத்தில் பெரும்பாலானோர் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், வீடுகள், உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வயநாடு மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் கேரளா மாநில அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வயநாடு மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சூரல்மலைப் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு வங்கியான கேரளா வங்கியில் கடன் பெற்றுள்ளனர்.
இதனிடையே மாவட்டத்தின் பலரும் வீடுகள், குடும்ப உறுப்பினர்கள், உடைமைகளை இழந்து தவித்து வரும் நிலையில், கடன் பெற்றவர்களின் மொத்த கடனையும் தள்ளுபடி செய்வதாகக் கேரளா வங்கி தெரிவித்துள்ளது. கேரளா வங்கி சார்பில் ஏற்கனவே முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று இந்த வங்கியில் பணியாற்றும் பணியாளர்கள் தாங்களாக முன்வந்து தங்களது 5 நாள் ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

