
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் கூட வெடிக்கலாம் எனச் சிலர் சொல்லி வருகிறார்கள். இதற்கிடையே இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வெடித்தால் தான் இங்கிலாந்துக்கு தப்பிச் செல்வேன் என்று பாகிஸ்தான் அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார். கடந்த மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. பஹல்காம் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது
மேலும், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. கடந்த வாரம் ராணுவத் தளபதிகளுடன் நடந்த மீட்டிங்கில் கூட பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி எங்கே எப்படித் தரலாம் என்பது குறித்த முடிவை எடுக்க ராணுவத்திற்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்தும் கூட முப்படைத் தளபதிகளைப் பிரதமர் மோடி தனித்தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் துப்பாக்கியுடன் எல்லைக்குச் செல்வீர்களா என்று பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினர் ஷேர் அப்சல் கான் மார்வத்திடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குச் சற்றும் யோசிக்காத ஷேர் அப்சல் கான், “இந்தியாவுடன் போர் வெடித்தால் நான் இங்கிலாந்துக்குச் சென்றுவிடுவேன்” என்று பதிலளித்தார்.
இரு தரப்பிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி பின்வாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர், “நான் சொன்னவுடன் அவர் கேட்டுவிடுவாரா.. நான் சொன்னதைக் கேட்டு அவர் பின்வாங்கிவிடுவாரா.. மோடி என்ன எனது அத்தையின் மகனா?” எனக் கிண்டலாகக் கேட்டார். ஷேர் அப்சல் கானின் இந்தப் பேச்சு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பொதுவாக எந்தவொரு போர் அல்லது தாக்குதல் நடந்தாலும் அரசியல் தலைவர்கள் துணிச்சலாக இருக்க வேண்டும். அப்போது தான் மக்களும் தைரியமாக இருப்பார்கள்.


