
இஸ்ரேல் நாட்டை சுற்றிலும் கடந்த சில காலமாகவே பதற்றம் இருந்து வருகிறது. ஹவுதி, ஹமாஸ் ஆயுதக் குழுக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் சென்ற நேரம் பார்த்துத் திடீரென அங்குத் தாக்குதல் நடந்துள்ளது. இதனால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஏர் இந்தியா இஸ்ரேல் நாட்டிற்கான தனது விமானச் சேவைகளைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.மத்தியக் கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
அதேநேரம் தாக்குதல் பெரியளவில் குறைந்துவிட்டதால் மெல்ல அங்கு இயல்பு நிலையும் திரும்பி வந்தது. அதன்படி சர்வதேச விமானச் சேவையும் அங்கு நார்மலாகிவிட்டது. இந்தச் சூழலில் தான் டெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான விமானம் புறப்பட்டுச் சென்றது. சரியாக அந்த நேரம் பார்த்து பென் குரியன் விமான நிலையத்திற்கு அருகே ஏவுகணைத் தாக்குதல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏமனின் நாட்டை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த ஏவுகணையே பென் குரியன் விமான நிலையத்திற்கு அருகில் தாக்கியது.. இதனால் வானத்தில் புகை மூட்டம் ஏற்பட்டது. மேலும், திடீரென விமான நிலையம் அருகே இப்படிப் புகை மூட்டம் கிளம்பியதால் பயணிகள் அச்சமடைந்தனர். இது தொடர்பாக ஏர் இந்தியா தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று காலை பென் குரியன் விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தால்.. டெல்லியில் இருந்து டெல் அவிவ் செல்லும் ஏர் இந்தியா விமானம் AI139 அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் வழக்கம் போல் அபுதாபியில் தரையிறங்கியது.
கடந்த 2023ல் அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென ஹமாஸ் படை தாக்குதலை நடத்தியது. மத்தியக் கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக மெல்ல அமைதி திரும்பி வந்த நிலையில், இந்த ஒரு தாக்குதல் அமைதியை முழுமையாகச் சீர்குலைத்துவிட்டது. இதனால் அங்கு மத்திய கிழக்கில் மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு பிறகே ஹமாஸ் மீது இஸ்ரேல் முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. ஹமாஸை ஒழிக்கும் வரை போரை நடத்துவோம் என இஸ்ரேல் அறிவித்தது. அதைத்தொடர்ந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக ஹமாஸ் மீது இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதலை நடத்தியது.




