
சீனாவின் ஹாங்சோவில் நடந்து வரும் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் 9ஆவது நாளான இன்று நடந்த தடகளப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனையான வித்யா ராமராஜ் சாதனை படைத்துள்ளார்.
வித்யா ராம்ராஜ், பந்தய தூரத்தை 55.42 வினாடிகளில் கடந்து பிடி உஷாவின் சாதனையைச் சமன் செய்துள்ளார்.
பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். வித்யா ராம்ராஜ் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். கடந்த 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் நடந்த பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பிடி உஷா 55.42 வினாடிகளில் பந்தயத்தைக் கடந்து 4ஆவது இடம் பிடித்தார். இந்த நிலையில் தான் 39 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடிக்க முடியாத இந்தச் சாதனையை வித்யா ராமராஜ் முறியடிக்காவிட்டாலும் அதனைச் சமன் செய்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த வித்யா ராமராஜ், கொரோகா காலகட்டத்திற்கு பிறகு சென்னைக்கு வந்துள்ளார். இவரது தந்தை ஒரு ஓட்டோரிக்ஷா ஓட்டுனர். வித்யாவிற்கு நித்யா ஒரு சகோதரி இருக்கிறார். இருவரும் இரட்டை சகோதரிகள். நித்யாவும் இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தடகள ஓட்டப்போட்டியில் பங்கேற்கிறார். வித்யா 400 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் நிலையில், 100 மீட்டர் தடை ஓட்டத்தில் நித்யா விளையாடி வருகிறார்.
இதற்கு முன்னதாகச் சண்டிகரில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 400 மீட்டர் தடகள போட்டியில் 55.43 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார்.



