
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று (ஜன.4) காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் பட்டாசு தயாரிக்க மருந்துக் கலவை தயாரிக்கும்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதில் 4 அறைகள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் 4 ஆண் தொழிலாளர்கள் உட்பட 6 பேர் பலியாயினர்.
வேல்முருகன், நாகராஜ், கண்ணன், காமராஜ், சிவகுமார், மீனாட்சிசுந்தரம் ஆகிய 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் 90% தீக்காயத்துடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
விபத்துகுறித்த தகவல் அறிந்து சம்பாவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய வாகனங்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். வச்சகாரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசி பாலன், மேலாளர் தாஸ் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர்மீது அஜாக்கரதையாகச் செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பின்றி பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.



