IND vs ENG 4th Test: அறிமுக போட்டியிலேயே இளம் வீரர் அசத்தல்!

Advertisements

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பீகாரைச் சேர்ந்த ஆகாஷ் தீப் தனது அறிமுக போட்டியிலேயே இதுவரையில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றிச் சாதனை படைத்துள்ளார்.

ராஞ்சியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் அறிவித்தது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான இந்திய அணியின் தொப்பியைத் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டிடமிருந்து பெற்றுக் கொண்டார். அதன் பிறகு குடும்பத்தினரை சந்தித்து தாயாரிடம் ஆசி பெற்றார். மேலும், அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இங்கிலாந்து அணியில் ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இந்திய அணியைப் பொறுத்த வரையில் முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் தொடக்க ஓவர்களை வீசினர்.

ஆகாஷ் தீப் வீசிய 4ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் ஜாக் கிராவ்லி கிளீன் போல்டானார். இது அவரது டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் விக்கெட். ஆனால், அதனை நோபாலாக வீச ஆகாஷ் தீப் ஏமாற்றம் அடைந்தார். அதன் பிறகு மீண்டும் 9.2ஆவது ஓவரில் பென் டக்கெட் விக்கெட்டைக் கைப்பற்றிச் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

அதே ஓவரில் 4ஆவது பந்தில் ஆலி போப் விக்கெட்டையும் எல்பிடபிள்யூ முறையில் எடுத்தார். ஆனால், நடுவர் அவுட் கொடுக்காத நிலையில் ரோகித் சர்மா ரெவியூ எடுக்க, டிவி ரீப்ளேயில் கிளீன் எல்பிடபிள்யூ வர நடுவர் தனது முடிவை மாற்றி அவுட் கொடுத்தார். அதன் பிறகு 11.5ஆவது ஓவரில் ஜாக் கிராவ்லியை 2ஆவது முறையாகப் போல்டாக்கி உணவு இடைவேளைக்கு முன்பு வரை 3 விக்கெட் கைப்பற்றிச் சாதனை படைத்தார். அறிமுக போட்டியிலே சிறப்பாகப் பந்து வீசி விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆகாஷ் தீப்பிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *