
சென்னை: ”அதிமுக., வினர் தங்களது ஓட்டுகளை வீணடிக்கக் கூடாது; பாமக., வுக்கு ஓட்டளிக்க வேண்டும்” எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக – பாமக – நாம் தமிழர் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் தொடர்பாகப் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இடைத்தேர்தலில் பாமக வெற்றி பெற கூடாது எனத் திமுக., வினர் குறுக்குவழிகளில் முயற்சிக்கின்றனர்.
பாமக., வுக்கு ஓட்டுப்போட்டால், நலத்திட்டங்கள் கிடைக்காது, பணிகள் நடக்காது என ஆளும்தரப்பினர் கூறவதாகத் தகவல் வெளியாகிறது. திமுக., வின் அத்துமீறல்களை மீறி 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் பாமக வெற்றி பெறும்.
அதிமுக., வினர் தங்களது ஓட்டுகளை வீணடிக்கக் கூடாது; பாமக., வுக்கு ஓட்டளிக்க வேண்டும். அதிமுக, பாமக., வுக்கு பொது எதிரி திமுக தான். கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க தவறிய முதல்வர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தவிர்க்க முடியாதது. இவ்வாறு அவர் கூறினார்.



