
விழுப்புரம் : விஜயதசமியை முன்னிட்டு விழுப்புரத்தில் உள்ள பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோவில் ஹைக்கிரீவர் சன்னதியில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் தங்கள் குழைந்தைகளுடன் கலந்துகொண்டு கல்வியின் துவக்கமாக ‘அ’ என்ற எழுத்தினை அரிசியில் எழுதி முதல் கல்வியை துவக்கி வைத்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று குழந்தைகளுக்கு முதல் முறையாகக் கல்வி தொடங்கும் நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக விழுப்புரம் திருவிக வீதியில் உள்ள பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோவில் ஹயக்கிரீவர் சன்னதியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தது மட்டுமல்லாமல், தங்களின் குழந்தையின் கையைப் பிடித்து நெல் மற்றும் அரிசியில் பெயர் எழுதியும், ‘அ’ எழுத்து எழுதியும் முதல் கல்வியை தொடங்கி வைத்தனர். குழந்தைகள் கல்வியில் நல்ல திறனைப் பெற வேண்டும் வாழ்க்கையில் மேலும் மேலும் சிறக்க வேண்டும் என்பதற்காக வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகப் பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும் விஜயதசமியையொட்டி பல்வேறு தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பெற்றோர்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் பள்ளியில் சேர்த்தனர்.



