
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட கூடிய ஆட்சி தான் தற்போது நடைபெற்று வருகிறது என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூரில் தனியார் திருமண மண்டபத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியபோது, தலைமை யாரை முடிவு செய்து வேட்பாளராக அறிவிக்கிறார்களோ அவர்களை வெற்றி பெற வைத்து, திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார். தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு கிடையாது என்றும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட கூடிய ஆட்சி தான் இந்த 5-ஆண்டுகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.
தேர்தல் வரும் நேரத்தில் பெயரளவுக்கு கல்லூரி முடிந்து செல்லும் மாணவிகளுக்கு மட்டும் திமுக லேப்டாப் வழங்கி வருவதாகக் குற்றம் சாட்டினார். திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்றும் கூட்டணிக்குள் பிரச்சனைகள் உள்ளது என்றும் கூறினார்.


