
புதுடில்லி:
‘2047ம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாற, தேச எதிரிகளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்’ எனப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் நடந்த சுவாமி நாராயண் கோவிலின் 200வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாகப் பிரதமர் மோடி பேசியதாவது: ஜாதி, மதம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்தைப் பிளவுப்படுத்தும் சதி நடக்கிறது. தேச விரோதிகளின் இந்த முயற்சிகளை நாம் புரிந்து கொண்டு, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்தச் செயலை நாம் முறியடிக்க வேண்டும். படித்த இளைஞர்களை நாம் உருவாக்க வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகாரம் பெற வேண்டும். இந்திய இளைஞர்களின் திறமை உலக நாடுகள் முழுவதும் ஈர்க்கப்பட்டுள்ளது. உலக அளவில் நமது இளைஞர்களின் தேவை அதிகரிக்க போகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற ஒற்றுமை மிகவும் முக்கியமானது.
2047ம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற, தேச எதிரிகளுக்கு எதிராக ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் எனப் பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஒவ்வொரு நபருக்கும் ஒரு லட்சியம் இருக்கும், அதனைக் கண்டறிந்து செயல்பட்டால் நம் வாழ்வு மாறிவிடும் என்றும் அவர் கூறினார்.


