
தவெக தலைவர் விஜயால் தனியாகச் சாதிக்க முடியாது என்றும், விஜய் அரசியலில் பிழைக்க வேண்டும் என்றால் உழைக்கும் பாஜகவோடு இருக்க வேண்டும் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில், கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது, இதில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை, மாநிலத் துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர், மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், இளைஞரணித் தலைவர் SG சூர்யா, சிறுபான்மையினர் அணித் தலைவர் ஜான்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முப்பெரும் விழாவை முன்னிட்டு கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது, தொடர்ந்து பொதுமக்களுக்குச் சிறப்பு விருந்தினர்கள் அன்னதானம் பரிமாறினர். விழா முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானது போன்ற தோற்றத்தைத் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியன ஏற்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டினார்.
சிறுபான்மையினரின் வாக்குகள் தவெகவுக்குச் சென்றுவிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சுவதாகவும், இதற்காகச் சிறுபான்மையினரைத் தாங்கிப் பிடிக்கும் அரசியலை அவர் செய்வதாகவும் தமிழிசை கூறினார்.

