
குடியாத்தம் அருகே மூன்று குழந்தைகளின் தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சாமியார் மலை பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் ஒரு பெண் குழந்தை இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.
அதே பகுதியைச் சேர்ந்த மாலதி என்பவரிடம் சுமார் 10 மாதங்களுக்கு முன் 30 ஆயிரம் ரூபாய் 15 நாட்களுக்குப் பத்து ரூபாய் வட்டி என்று வாங்கியுள்ளனர். முப்பதாயிரம் ரூபாய் கடனுக்கு மொத்தம் 70 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அதில் 30,000 செலுத்திய பிறகு பாக்கி 40 ஆயிரம் ரூபாய் தரச் சொல்லி அவதூறாகப் பேசி மிரட்டி உள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த தினேஷின் மனைவி மோனிஷா வீட்டில் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோனிஷா உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மாலதியை கைது செய்யக் கோரி தினேஷின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டததால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

