
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம்குறித்து முதலில் வேங்கைவயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற மாற்றப்பட்டது.
2 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை புதுக்கோட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
இதில் வேங்கைவயலை சேர்ந்த 3 பேர்மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்களது பெயர் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது எனப் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் மூவர் சார்பில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், புகார்தாரரை சரியாக விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை நகல் வேண்டும். குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டதில், இந்த வழக்கு, பட்டியல் இனத்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வராததால், வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற மனுமீதான விசாரணை நடந்து வந்தது.
இந்த 2 வழக்குகளில் இரு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி வசந்தி, வழக்குமீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இன்று காலைக் கோர்ட்டில் 2 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அப்போது சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வேங்கைவயல் வழக்கு வன்கொடுமை வழக்கு இல்லையெனக் கூறி புதுக்கோட்டை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-2 கோர்ட்டுக்கு மாற்றி நீதிபதி வசந்தி உத்தரவிட்டார்.
