
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பா.ஜ.கச்சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குலத்தொழில் தொடர்பாகப் பேசிய பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் விஸ்வகர்மா திட்டத்தை மாநில அரசு அனுமதிக்கவில்லை என்றும், குலத்தொழிலை திமுக அனுமதிக்க மறுப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும், விஸ்வகர்மா சமுதாயத்திற்குரிய பெருமையான விஷயத்தையே குலைக்க நினைக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்த அவர், விஸ்வகர்மா பெருமையைக் குலைக்க நினைப்பவர்களைக் கேள்வி கேட்க யாராலும் முடியவில்லை என்று பேசியிருந்தார்.
மேலும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கூட மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் அமல்படுத்தப்படுவதாகவும், விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாகக் கூறிய அவர், ஒவ்வொரு சாதிக்கும், ஒரு பெருமை இருப்பதை போலக் குலத்தொழிலுக்கும் பெருமை உள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாகத் திருச்சி வேலுச்சாமி தெரிவித்துள்ளதாவது, வானதி சீனிவாசனின் பேச்சு ஆணவத்தின் உச்சம் என்றும், குலத்தொழிலை பற்றிப் பேசும் அனைவரும் அவர்களின் குலத்தொழிலை செய்யப்பட்டும் என்று கூறியுள்ள அவர், வானதி தனது குலத்தொழிலை செய்யத் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் வானதி சீனிவாசன் பேச்சுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.



