
லக்னோ; உ.பி.யில் மீண்டும் ஓநாய் தாக்குதல் நடத்தியிருப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
உ.பி.யில் உள்ளது பஹ்ரைச் மற்றும் அதைச் சுற்றியுள்ள 50க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் மக்கள் பல வாரங்களாகவே தூக்கத்தை தொலைத்துள்ளனர். அங்குச் சுற்றித்திரியும் ஓநாய்கள் கூட்டம், கிட்டத்தட்ட 15,000க்கும் அதிகமான மக்களைப் பீதியில் ஆழ்த்தி வருகின்றன. தூங்கவிடாமல் உயிர் பலிகளை வாங்கிய ஓநாய்களை வனத்துறையினர் பிடித்துவிட்டதாக அண்மையில் அறிவித்து இருந்தனர்.
மீண்டும் ஒரு சம்பவம்
ஓநாய் இனி இல்லை, வரவே வராது என்று எண்ணியிருந்த கிராம மக்களின் எண்ணத்தை ஒரு லாரி லோடு மண்ணை அள்ளிப் போட்டது போல் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இம்முறையும் அதே பஹ்ரைச் பகுதியில் தாக்குதலை நடத்திவிட்டு தப்பி இருக்கிறது ஓநாய் கூட்டம்.
ஹர்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கூம்னி என்ற பகுதியில் இளம்பெண் ஒருவர் ஆரூஷ் என்ற தமது 6 மாத பச்சிளம் குழந்தையைக் கவனித்துக் கொண்டிருந்துள்ளார். இரவு 2.30 மணி அளவில் அங்கு வந்த ஓநாய், குழந்தையைக் கவ்விக்கொண்டு செல்ல முயன்றது.
காயங்கள்
நொடியில் சுதாரித்துக் கொண்ட தாய், போராடவே ஓநாய் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. குழந்தையை அவர் மீட்டுவிட்ட போதிலும், ஓநாய் தாக்குதலில் காயங்கள் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார்.
5 வயது குழந்தை
இதே பகுதியில் வேறொரு இடத்தில் 5 வயது சிறுமி மம்தா என்பவரையும் ஓநாய் கடித்து உள்ளது. தமது சகோதரியுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது தந்திரமாக அங்கு வந்த ஓநாய், மம்தாவை கவ்விக் கொண்டு செல்ல முயன்றுள்ளது. சத்தம் கேட்டு முழித்த மம்தா அலற, ஓநாய் தப்பியோடி விட்டது. இருப்பினும், ஓநாய் தாக்குதலில் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட, அவரும் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தீவிர முயற்சி
அண்மைக்காலமாகப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து குழந்தைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்திய ஓநாய் கூட்டத்தை வனத்துறையினர் தீவிர முயற்சிக்குப் பின்னர் பிடித்தனர். இனி ஓநாய் தொல்லை இல்லவே இல்லை என்று அனைவரும் நம்பி இருந்த வேளையில் மீண்டும் அதுபோல ஒரு சம்பவம் அதே பஹ்ரைச் பகுதியில் நடந்துள்ளது மக்களை மட்டும் அல்லாது ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் தூங்கவிடாமல் செய்துள்ளது.


