Uttar Pradesh:இந்திராகாந்திக்காக விமானத்தைக் கடத்திய காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்!

Advertisements

லக்னோ:1978-ம் ஆண்டு மத்தியில் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது. உத்தரபிரதேசத்தில் முதல்- மந்திரியாக ராம்நரேஷ் யாதவ் இருந்தார்.

அந்த ஆண்டு டிசம்பர் 20-ந்தேதி இந்திய ஏர்லைன்ஸ் விமானம் 152 பயணிகளுடன் கொல்கத்தாவிலிருந்து புதுடெல்லி புறப்பட்டது. அந்த விமானம் லக்னோ வந்தபோது விமானத்தில் இருந்த இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களான போலா நாத் பாண்டே, தேவேந்திர பாண்டே ஆகிய 2 பேர் நேராக விமானியின் அறைக்குள் நுழைந்து கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு விமானத்தைக் கடத்துவதாக அறிவித்தனர்.

மேலும் இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி ஆகிய இருவர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். ஜெயிலில் உள்ள இந்திரா காந்தியை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் பதட்டம் நிலவியது.

இதைத்தொடர்ந்து அரசு சார்பில் போலாநாத் பாண்டே, தேவேந்திர பாண்டவுடன் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அப்போது அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதை தொடர்ந்து விமானம் புறப்பட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு போலாநாத் பாண்டே, தேவேந்திர பாண்டே ஆகிய இருவரும் போலீசில் சரண் அடைந்தனர்.

பின்னர் 1980-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமர் ஆனவுடன் போலாநாத் பாண்டே, தேவேந்திர பாண்டே ஆகியோர் மீதான வழக்குகள் கைவிடப்பட்டது.

பின்னர் போலாநாத் பாண்டே உத்தரபிர தேசத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார். தற்போது 71 வயதான அவர் பதவி எதிலும் இல்லாத நிலையில் சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் காலமானார். அவரது உடல் லக்னோவில் பொதுமக்கள் மற்றும் கட்சியினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *