
உத்தர பிரேதசில் அவதேஷ், அதிதி சிங் திருமணத்தில் 31 லட்ச ரூபாய் வரதட்சணையை நிராகரித்து, வெறும் ஒரு ரூபாய் மட்டும் ஏற்று பாராட்டுகள் பெற்றார்.
வரதட்சணை தொடர்பான வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வரும் வேளையில், உத்தர பிரேதசத்தில் ஒரு மணமகன், மணப்பெண் வீட்டார் வழங்கிய 31 லட்ச ரூபாய் வரதட்சணையை பெற மறுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர்நகர் அருகே நக்வா கிராமத்தைச் சேர்ந்த அவதேஷ், அதிதி சிங் ஆகியோரின் திருமண விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மணப்பெண்ணின் தந்தை கொரோனா தொற்று காலத்தில் உயிரிழந்துவிட்ட நிலையில், குடும்பத்தினர் சேர்ந்து மகளுக்காக 10 லட்ச ரூபாய் ரொக்கம், 21 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் ஆகியவற்றை வரதட்சணையாக ஏற்பாடு செய்திருந்தனர்.
திருமண நாளில் உறவினர்கள் முன்னிலையில் பெண் வீட்டார் வரதட்சணையை தட்டில் வைத்து மணமகனிடம் கொடுத்தனர். ஆனால் அதனை வாங்க மறுத்த மணமகன் அவதேஷ், வரதட்சணைக்கு எதிரான தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்து, வெறும் ஒரு ரூபாயை மட்டும் சம்பிரதாயத்திற்கு வாங்கிகொண்டார்.
வரதட்சணை பணத்தை வாங்காமல் அவதேஷ் மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். திருமணத்துக்கு வந்திருந்த அனைவரும் மணமகனை வெகுவாக பாராட்டினர். மணமகள் முழு திருப்தியோடும், மகிழ்ச்சியோடும் கணவன் வீட்டிற்கு சென்றார்.


