கடலூர் கடற்கரையில் அசிங்கம்!

Advertisements

கடலூர்:

பீச்சுக்கு குடும்பத்துடன் சென்ற பெண்களிடம் குடிபோதையில் 4 பேர் அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது… இந்த 4 பேரில் ஒருவர், “எங்கள் ஆட்சி நடக்கிறது, எங்களை ஒன்றும் செய்ய முடியாது” என்று சொன்னாராம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண்கள் போலீஸில் புகார் தரும்அளவுக்கு சென்றிருக்கிறார்கள். என்ன நடந்தது கடலூரில்?

கடலூர் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் முத்து… இவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பெயர் பவானி. குறிஞ்சிப்பாடி நகர பாமக மகளிரணி தலைவராகப் பவானி செயல்பட்டு வருகிறார்.

புதுசத்திரம்:

கடந்த 24-ம் தேதி மாலை, புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியகுப்பம் கடற்கரைக்குக் குடும்பத்தினருடன் குளிக்கச் சென்றுள்ளனர்… அதாவது, பவானி, தன்னுடைய கணவர் முத்து, சிதம்பரத்தைச் சேர்ந்த தனது அண்ணன் சத்தியமூர்த்தி, அண்ணி ஐஸ்வர்யா, உறவினரான திருநங்கை யாழினி, 2 உறவினர்கள் உள்ளிட்ட 7 பேர் மற்றும் 3 குழந்தைகளுடன் இந்தப் பீச்சுக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு 4 இளைஞர்கள், குடிபோதையில் அங்கு வந்து, இவர்களிடம் பிரச்சினை செய்துள்ளதாகத் தெரிகிறது… ஆபாசமான வார்த்தைகளால் பேசியதுடன், ஒருகட்டத்தில் எல்லை மீறியும் நடந்து கொண்டார்களாம்… இதைப் பவானி தடுக்க முயன்றுள்ளார்…

தாக்குதல்:

ஆனால், பவானியையும், அவருடனிருந்த ஐஸ்வர்யா, யாழினி ஆகியோரையும் அந்தக் கும்பல் சரமாரியாகத் தாக்கியிருக்கிறது… முத்து மற்றும் சத்தியமூர்த்தி உள்ளிட்டவர்கள், அவர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால், தடுக்க வந்த ஆண்களையும் அந்தப் போதை கும்பல் சரமாரி தாக்கியுள்ளது… இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் கொந்தளித்து, அந்தக் கும்பலுக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவும், அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்களாம்.

இந்தச் சம்பவம்குறித்த வீடியோவும், சோஷியல் மீடியாவில் வேகமாகப் பரவியது. இதையடுத்து, புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 25-ம் தேதி பவானி இதுபற்றிப் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, தியாகவல்லி லெனின் நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கவேல் (24), தினேஷ் (21), சரவணன் (22), பிரவீன் (24) ஆகிய 4 பேர்மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன், தலைமறைவாக உள்ள பிரவீன் தவிர மற்ற 3 பேரையும், புகார் தந்த அன்றைய தினமே கைது செய்தனர்.

பவானி வேதனை:

இது தொடர்பாகப் பவானி செய்தியாளர்களிடம் சொல்லும்போது, “நாங்கள் பெரியகுப்பம் கடற்கரையில் குளித்துக் கொண்டிருக்கும்போது குடிபோதையில் வந்த 4 பேர் எங்களை அருவருக்கத் தக்க வார்த்தைகளால் திட்டினார்கள்… எங்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார்கள்.

ஒருகட்டத்தில், நாங்கள் பாமகவினர் என்று தெரிந்ததும் தாக்குதலை இன்னும் தீவிரமாக்கினார்கள்.
எங்களைத் தாக்கியவர்களில் ஒருவன் “எங்கள் ஆட்சி நடக்கிறது, எங்களை ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறி மிரட்டினான்

அண்ணன், அண்ணி:

எங்களுக்குப் பீச்சில் நடந்த கொடுமைகள் அத்தனையும் வாட்ஸ்அப்பில் வீடியோவாகவும் பரவிவிட்டது. அதைப் பார்த்துவிட்டு, பலரும் என்னை அழைத்துக் கேட்பது மிகுந்த வருத்தமாக உள்ளது. என்னுடைய அண்ணன், அண்ணி குடும்பத்தினருக்கெல்லாம் இந்தச் சம்பவம் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது” என்று வேதனை தெரிவித்துள்ளார். பீச்சில் நடந்த சம்பவ வீடியோவைக் கண்டு பொதுமக்கள், கொதிப்புடன் கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *