
சென்னை:
புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் இளைஞர் அணி தலைவர் நியமனம் தொடர்பாகப் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் வெடித்தது. கட்சியில் சேர்ந்த உடனேயே எப்படி பொறுப்பு வழங்கலாமென ராமதாஸ் கேட்க, விருப்பம் இருந்தால் இருக்கலாம், இல்லைனா விலகிக் கொள்ளலாமென ராமதாஸ் பேசியது கட்சியினர் மட்டுமல்லாத தமிழக அரசியலில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இளைஞர் அணி தலைவருக்காக மகனையே ராமதாஸ் எதிர்க்கக் காரணம் என்ன? யார் இந்தப் பரசுராமன் முகுந்தன்?
பாமக 2026 சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க தயாராகி வரும் நிலையில் புதுச்சேரியில் 2024 பாமக பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜிகே மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழகம் முழுவதிலும் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காலையில் தொடங்கிய பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாமக நிறுவனரும் அன்புமணி ராமதாஸின் தந்தையுமான ராமதாஸ், 2026 சட்டமன்ற தேர்தலில் ஐந்து தொகுதிகள் 50 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமானால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பலம் தேவை. அதற்காக அன்புமணிக்கு உதவுவதற்காகப் பரசுராமன் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக நியமனம் செய்கிறேன் என்றார். அப்போது அருகில் இருந்த அன்புமணி ராமதாஸ் குறுக்கிட்டு ‘எனக்கு உதவியாகவா? எனக்கு வேண்டாம்’ எனக் கூறினார்.
‘உனக்கு வேண்டாம் என்றால் நீ போ!’ என்ற ராமதாஸ் ‘நான் ஆரம்பித்த கட்சி நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் பரசுராமன் முகுந்தன் தான் இளைஞரணி தலைவர் என்றார். அப்போது பொதுக்குழுவில் கலந்து கொண்டிருந்த பாமக தொண்டர்கள் ராமதாஸுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது “மீண்டும் இது என் கட்சி… நான் ஆரம்பித்த கட்சி… நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும்” என அழுத்தமாகப் பேசிய ராமதாஸ்,” உங்களுக்கு வேண்டாம் என்றால் யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளுங்கள்” எனப் பேசினார்.
இதனால் அதிருப்தி அடைந்தாலும் மேடையில் சிரித்தவாரே அமர்ந்திருந்தார் அன்புமணி ராமதாஸ். தற்போது இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பரசுராமன் முகுந்தன் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அவர் வேறு யாருமல்ல ராமதாஸின் சொந்த பேரன் தான் அன்புமணி ராமதாஸின் அக்காவான காந்திமதி – பரசுராமன் தம்பதியினரின் மகன் தான் முகுந்தன் அவரைத் தான் தற்போது கட்சியின் இளைஞர் அணி தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மேடையில் இருந்த போதே பனையூரில் தான் தனியாக அலுவலகம் தொடங்கி இருப்பதாகவும் அதற்கான தொலைபேசி எண்ணை மேடையிலேயே வெளியிட்ட அன்புமணி ராமதாஸ், மைக்கை தூக்கி எறிந்தார். தொடர்ந்து ஏராளமான தொண்டர்கள் சூழ பொதுக்குழுவிலிருந்து அன்புமணி ராமதாஸ் வெளியேறி நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் அவர் பின்னால் அணிவகுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



