
சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 2வது முறையாகச் சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கடந்த ஆண்டு சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில், டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றைபோலச் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் ‘எனப் பேசினார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையானதை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்து உதயநிதிக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு இடங்களில் அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த பஜ்ரங் தள நிர்வாகி பரமேஷா, பெங்களூருவில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், உதயநிதி ஸ்டாலினின் பேசிய கருத்தால் இந்துக்களின் மனம் புண்பட்டுள்ளது. இரு தரப்பினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையிலும், மத உணர்வை அவமதிக்கும் வகையிலும் அவரது பேச்சு அமைந்திருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி பிரீத் ஜே முன்னிலையில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மார்ச் 4ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி, உதயநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் உதயநிதி ஆஜராகவில்லை. ஆனால், அவருக்கு அனுப்பப்பட்ட சம்மன் பெற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அது அவருடைய கையொப்பமாகத் தெரியவில்லை என்பதால், ஏப்ரல் 26ம் தேதி நேரில் ஆஜராகும்படி 2வது முறையாக அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இம்முறை, சென்னையில் உள்ள எஸ்.பி. அந்தஸ்திலான அதிகாரி வாயிலாக உதயநிதியிடம் நேரில் சம்மன் வழங்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

