
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் தாயார் மறைவுக்கு அமைச்சர்கள் நேரில் அஞ்சலி!
பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் தாயார் மறைவுக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.கே. எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் அவர்களின் தாயார் அமராவதி(வயது 94) வயது முதிர்வு காரணமாக இன்று காலை காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கழக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர், மாற்றுக் கட்சியினர், வணிக பிரமுகர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரின் இல்லத்திற்கு நேரில் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே இன்று மாலை 5 மணி அளவில் இறுதி சடங்கு நடைபெற உள்ளது.

