
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்குப் பேட்டி வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது,
இந்தியாவின் கொள்கை மக்கள் தொகையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறது. இதற்கான நடவடிக்கைகள் தென் மாநிலங்களில் கடந்த 30, 40 ஆண்டுகளாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் டோட்டல் ஃபெர்ட்டிலிட்டி ரேட் (டிஎப்ஆர்) குறைந்துள்ளது. இது நமக்குப் பாதகமாக இருக்கக் கூடாது.
இதுகுறித்து, முதலமைச்சர் 5ம் தேதி அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நடத்தவுள்ளார். அதில் பாமக சார்பில் கலந்து கொண்டு கருத்துகளைப் பகிர்வார்.
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டால் மட்டுமே, தமிழ்நாட்டிற்கு கல்வி துறையில் நிதி வழங்குவோம் என்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
பாமகவைப் பொறுத்தவரை, இது தவறான அணுகுமுறை ஆகும். எந்த மாநிலத்திற்கும் மத்திய கொள்கையைக் கட்டாயமாக அமல்படுத்தக் கூடாது.
கல்வி என்பது குறிப்பாகப் பொது பட்டியலில் உள்ளது. மத்திய அரசின் சட்டம் கொண்டு வந்தால், அது ஏற்கப்படுவது அல்லது ஏற்கப்படாதது மாநில அரசின் உரிமை ஆகும்.
மும்மொழிக் கொள்கையை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், இல்லையெனில் நாங்கள் நிதி வழங்கமாட்டோம் என்ற கருத்து தவறானது. இதனை வலியுறுத்துவது சரியல்ல.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைகள் கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன. இது தொடர வேண்டும்.
எந்த மொழியையும் கட்டாயமாகக் கற்பிக்கக் கூடாது. அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம், ஆனால், குறிப்பிட்ட ஒரு மொழியை மட்டும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது தவறு.
தமிழ்நாட்டிற்கே உரிய கொள்கை உள்ளது. அந்தக் கொள்கையை மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு உரிமை இல்லை.

