
உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்ச வரம்பை நீக்குவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனால் டிக்கெட் கட்டணம் பன்மடங்கு அதிகரிக்க உள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக உச்சவரம்பை நீக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் அமலுக்கு வருவதால், விமான நிறுவனங்கள் தங்களின் இயக்கச் செலவு மற்றும் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தன்னிச்சையாகக் கட்டணங்களை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2025 டிசம்பர் மாதத்தில், இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்களின் விமானச் சேவைகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாகக் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்தன. இதைக் கட்டுப்படுத்தவும் பயணிகளைப் பாதுகாக்கவும், தூரத்தைப் பொறுத்து ஒரு வழிப் பயணத்திற்கு அதிகபட்சமாகச் சுமார் 18ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என ஒன்றிய அரசு தற்காலிகமாக உச்சவரம்பு விதித்திருந்தது.
தற்போது விமானப் போக்குவரத்துத் துறை ஓரளவு நிலைபெற்றுள்ள நிலையில், சந்தை விதிகளைச் சீராக்கும் நோக்கில் இந்தக் கட்டுப்பாடு நீக்கப்படுவதாகச் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.



